மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவரும் மைலாப்பூர் கிளப் வளாகத்தில் விதிகளை மீறி இயங்கிவரும் மதுபான பாரை உடனடியாக மூடவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

அறநிலையத்துறையின் இந்த உத்தரவையடுத்து கோயில் நிலத்தில் இயங்கிவந்த பாரை மூடுவதென கிளப் நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. நிர்வாகத்தின் இந்த முடிவு ‘பார்’ உள்ளளவும் குடித்துக் களித்த மேன்மக்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.

பாரை உடனடியாக மூடாவிட்டால் கோயில் நிலத்தில் இயங்கிவரும் கிளப்பின் மொத்த நடவடிக்கைக்கும் ஆபத்து வந்துவிடக்கூடாது என்று எண்ணி இந்த முடிவெடுத்திருப்பதாக பார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திரைமறைவில் ஆட்டம் போட்டுவந்தவர்களின் குடுமியை இந்து சமய அறநிலையத்துறை இறுக்கிப்பிடித்து இருப்பதாலேயே கிளப் நிர்வாகம் உடனடியாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.