திருச்சி: திருச்சி அருகே உள்ள குமாரவயலூர் முருகன் கோவிலில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த இரண்டு அர்ச்சகர்களை இந்துசமய நிலையத்துறை பணி நீக்கம் செய்துவிட்டு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின்படி, 2 பேரை புதிதாக நியமனம் செய்தது. இதை எதித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அறநிலையத்துறை ஆகம விதிகளை மீறி நியமனம் செய்த அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

நீண்ட நாட்களாக அர்ச்சகராக உள்ள மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது குறித்து 8 வாரத்தில் முடிவெடுக்க நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அதிரடி உத்தரவிட்டு உள்ளனர்.

ஸ்ரீரங்கம், குமாரவயலூர், சுப்ரமணியசுவாமி கோவிலில்  நீண்ட காலமாக பணியாற்றி வந்த தங்களை பணிநீக்கம் செய்துவிட்டு, , தமிழ்நாடு அரசால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் பணி  அமர்த்தியது.

அறநிலையத்துறையின் இந்த உத்தரவுக்கு எதிராகவும், தங்களை மீண்டும்  அர்ச்சகர்களாக நியமனம் செய்யக்கோரி கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர்  சார்பில்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “குமாரவயலூர், சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் , பிரபு, ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அதே கோவிலில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர்கள் அர்ச்சகர்கள் பதவிக்கு மனு செய்தும், அவர்கள் தேர்வு செய்யப்படாமல்,  பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டது எப்படி என அதிரடியாக கேள்வி எழுப்பினார்.

ஆனால், அரசு தரப்பில்,   2021 ஆம் ஆண்டு  அர்ச்சர்களாக நியமிக்கப்பட்ட  நிலையில், 2022 செப்டம்பர் மாதம் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது” என வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரர்கள் பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோவிலில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் கோவில் அறங்காவலரால் முறையாக நியமிக்கப்படவில்லை என்றாலும், தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் ஊதியம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகம விதிகளுக்கு எதிராக குமாரவயலூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற அர்ச்சகர் நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த கோவிலில் அர்ச்சகர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய, மனுதாரர்களையே அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக கோவிலின் அறங்காவலர், எட்டு வாரங்களுக்குள்ளாக பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், பல கோவில்களில் அர்ச்சகர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அருகிலுள்ள புகழ்பெற்ற வயலூர் கோயில் சிவாகம அடிப்படையில் அமைந்த சிவாலயம் ஆகும். அங்குள்ள முருகப்பெருமான் சன்னிதியின் பிரசித்தி காரணமாக வயலூர் முருகன் கோயில் என்றே அழைக்கப் படுகின்றது. இங்கு 10க்கும் மேற்பட்ட  அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பலர் கடந்த 12 வருடங்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.  அவர்களில் 2 பேரை பணி நீக்கம் செய்துவிட்டு, அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை நியமனம் செய்தது.

இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது, புதிய அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் கடந்த ஆண்டு (2022)  ஏப்ரல் 19 அன்று  கோவிலில் அர்ச்சனை செய்ய முயன்றபோது, ஏற்கனவே பணியாற்றிய அர்ச்சகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர். இது பெரும் பிரச்சினையானது.  இதுதொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட வர்கள் தொடர்ந்த  வழக்கில், அறநிலையத்துறையின் உத்தரவை ரத்து செய்து  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.