சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட கொரோனா நிதி ரூ.133 கோடி வழங்கப்பட்டது எப்படி? என்பதை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக, அவ்வப்போது அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக,  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஆண்டு (2020) அமல்படுத்தப்பட்ட கொரோனா  ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது,  கண்பார்வையற்ரவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம், கண்பார்வையற்றவர்களுக்கு பொருந்தாது என அரசு, தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால்  கண்பார்வையற்ரவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மாற்ருத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1000 ரூபாய் மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என தெரிவித்தர். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க 133 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும், மீத தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.

இதையடுத்து, அரசு ஒதுக்கீடு செய்த 133 கோடி ரூபாயில் மீதமுள்ள 73 கோடி ரூபாய் நிலை என்ன என  கேள்வி எழுப்பிய  நீதிபதிகள், 133 கோடி ரூபாய் தொகை எப்படி வினியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.