சென்னை: வாடகைதாரர்களின் விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்எ ன வீட்டு உரிமையாளர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள் , தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால், சமீப காலமாக, வீட்டு உரிமையாளர்கள் அதை கண்டுகொள்வது இல்லை.

இந்த நிலையில்,  வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள் அளிக்கும் ஆவணங்களின்படி, வாடகைதாரர்களின் விவரங்கள்  காவல் நிலையங்களில் உள்ள கணினியில் பதிவு செய்யப்படும் என்றும், ஆணையர் அலுவலகத்தில் உளவுப்பிரிவில் இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம் , அவர்களது நிரந்தர முகவரி, வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் குறித்த விண்ணப்ப மனுக்களில் பூர்த்தி செய்து, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும். இவை காவல் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  வீட்டு உரிமையாளர்கள் , வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.