டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்.தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பிபின் ராவத்தின் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 முப்படை தளபதி  பிபின் ராவத் தனது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்துக்கு வந்த ராணுவ ஹெலிகாப்டர்  குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில்  பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 13 பேரின்  உடல்களும், டெல்லி கொண்டு வரப்பட்டு,  நேற்று இரவு பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் ராணுவ அதிகாரி கள்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அடையாளம் காண்பபட்ட அதிகாரிகளின் உடல்கள் இறுதி சடங்குக்காக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் உடல்,  டெல்லியில் உள்ள அவரது  இல்லத்தில்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை  அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், அவரது உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியை, மாநில ஆளுநர் அனில் பைஜால் உள்பட ராணுவ அதிகாரிகள், அரசு  அதிகாரிகள் என எராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, பிபின் ராவத்தின் மக்கள் மற்றும் குடும்பத்தினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  அதன்பின், ராவத்தின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு டெல்லி கன்டோன் மென்டில் உள்ள மயானத்தில்  முழு ராணுவ மரியாதையுடன் இன்று பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.