சென்னை: தமிழகம் முழுவதும்  அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோயில்களுக்கு  சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சேவியர் என்பவர்,  சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்குச் சொந்தமான பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கின் வாதங்களைத் தொடர்ந்து, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டபடி,  கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கான மின் இணைப்பை துண்டிக்கவும், நியாயமான வாடகையை நிர்ணயிக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத கோயில் செயல் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் கோவில்  செயல் அலுவலர்கள் கைகோத்து செயல்படுவதாக குற்றம் சாட்டியதுடன், கடமையைச் செய்வதற்கு தான் செயல் அலுவலருக்கும், ஆணையருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறதே தவிர, ஏசி அறையில் இருப்பதற்காக அல்ல  காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், செயல்படாத அதிகாரிகளின்   ஊதியத்தை ஏன் பிடிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், இதுவரை கண்டறியப்பட்டுள்ள தகவலின்படி, கோயில் நிலத்தில் உள்ள 1,640 ஆக்கிரமிபாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், கோவிலின் செயல் அலுவலர்களின் செயல்பாட்டை அறநிலையத் துறை ஆணையர் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத செயல் அலுவலரை உடனடியாக அங்கிருந்து மாற்ற வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், கடந்த 2014-ம் ஆண்டு முதல் கோயில் செயல் அலுவலர்களாக பணியாற்றியவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன்,  தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளின் விவரங்களும், அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.