சென்னை 

சென்னை மாநகர பேருந்துகளில் யு பி ஐ மூலம் டிக்கட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இன்று சென்னை மாநகரப்போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய பிஎஸ்-VI பேருந்து  சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  அப்போது டெபிட் கார்டு, யு.பி.ஐ. மூலம் பயணிகள் பயணச்சீட்டு பெற வசதியாக மின்னணு பயணச்சீட்டு  இயந்திரத்தையும் அவர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர்.

இனி யு.பி.ஐ. முறையைப் பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ. சேவையைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வரத் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.

அதன்படி பேருந்துகளில் நடத்துநர்கள் யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்கக் கருவிகளை அமைச்சர்கள் நடத்துநர்களுக்கு வழங்கினர். இந்த கருவி தொடுதிரை வசதி கொண்டதாகும்.

கருவியில், பயணிகள் ஏறுமிடம் மற்றும் சேருமிடத்தைத் தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. மேலும் இக்கருவி மூலம் கார்டுடன் யு.பி.ஐ., க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.