சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் முழுமையாக நோய்த் தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராதாகிருஷ்ணன், நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 26 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

முகாம் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு 8.6 எனும் அடிப்படையிலே தொற்று பரவல் உள்ளது எனவும் நாளொன்றுக்கு பதிவாகும் நோய் எண்ணிக்கையும் 15,000 அளவுக்கு குறைந்து உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாக இருந்தாலும் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தடுப்பூசிதான் நிரந்தர தீர்வு எனக் கூறினார். நோய் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் நல்ல முன்னேற்றம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 25,555 ஆக்சிஜன் படுக்கைகள், 24,305 ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள், 2,539 ஐசியு படுக்கைகள் என 49,000 படுக்கைகள் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஏற்ப ஒன்றிய அரசு அளிக்க உள்ளது. கையிருப்பு உள்ளதை மக்களுக்கு தடுப்பூசி அளிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என கூறினார். 1,348 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிக்கபட்டுள்ளனர். 9,520 கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் உள்ளது.

கொரோன இல்லாத 355 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரனிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.