சண்டிகர்:

பாலியல் பலாத்கார குற்றவாளியான சாமியார் குர்மீத் ராம் ரகீமுக்கு சிறையில் சலுகை அளிக்கபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரகீமுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அவர் ரோதக் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைசாலையில் அவருக்கு ராஜ உபசாரம் நடப்பாதாக அவருடன் சிறையில் இருந்தவர் தெரிவித்துள்ளார்.

குர்மீத் ராம் ரகீம் அடைக்கப்பட்டு இருந்த சிறையில் ராகுல் என்பவர் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் விடுதலை ஆகி உள்ளார். செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘மற்ற கைதிகளை பார்க்க 20 நிமிடம் என்றால் ராம் ரகீமை பார்க்க வருபவர்களுக்கு அவருடன் 2 மணி நேரம் பேச அனுமதிக்கப்படுகிறது. சிறைசாலையில் அவருக்கு எந்த வேலையும் வழங்கப்படுவது இல்லை. அவர் எந்த வேலையும் செய்ததை நான் பார்த்தது இல்லை. அவருக்கு வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை என நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை ஹரியானா சிறித்துறை அமைச்சர் கிரிஷன் லால் பன்வார் இதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘அவருக்கு எந்த விஐபி சலுகையும் வழங்கப்படவில்லை. வேறு மற்ற கைதி போலவே நடத்தப்படுகிறார். ஒவ்வொரு சிறைகைதிகள், பிரிவுகளுக்கும் இடையே வெகுதூரம் உள்ளது. அவர்கள் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் தான் அந்த கைதி அவ்வாறு கூறியுள்ளார்’’என்றார்.