சென்னை

மிழகத்தில் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கடந்த 7-ம் தேதி தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு 11 ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு, தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றதால், குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 7 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நாளைதான் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் வகையில், நாளை நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தற்போது அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள், வருகிற 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.