மதுரவாயல் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரில், குட்கா கடத்தியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரவாயல், கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சொகுசு காரை ஆய்வாளர் ராதா கிருஷ்ணன் தலைமையிலான காவல் படையினர் சோதனை செய்தனர். அப்போது, காரில் 4 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காரில் இருந்த மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த ராமசாமி, பூந்தமல்லியைச் சேர்ந்த சதிஷ், திருவேற்காட்டைச் சேர்ந்த கார் டிரைவர் வினோத் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மூவரிடமிருந்தும், சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கைதான ராமசாமி பெங்களூரில் இருந்து காரில் குட்கா பொருட்கள் வாங்கி வந்து, அதை சென்னையில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்து வருவது தெரியவந்தது. மேலும் மதுரவாயல் காவல் நிலையத்தில் ராமசாமி மீது கடந்த 2017ம் ஆண்டு, குட்கா கடத்திய வழக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.