சென்னை:

ந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜெகன் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. 175  தொகுதிகளை கொண்ட ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை எதிர்த்து களமிறங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தை ஆட்சி செய்து வந்த  சந்திரபாபு நாயுடு கட்சி வெறும் 23 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், பவன் கல்யானின் ஜனசேனா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எந்தவொரு தொகுதியையும் கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாநில கவர்னர் நரசிம்மனை சந்தித்து, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினார். அவரும் ஜெகனை பதவி ஏற்க அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, வரும் 30ந்தேதி மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்க இருக்கிறார் . இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தனது பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்பட பல கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும்  ஜெகன் மோகன் ரெட்டி  தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று விஜயவாடாவில் நாளை மறுநாள் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதில்,   திமுக சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் டிஆர் பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.