டில்லி :

தமிழகத்துக்கு ஜூன் மாத பங்காக 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிலி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை  ஆணையத்தின் 3வது ஆலோசனைக் கூட்டம் 5 மாதங்களுக்கு பிறகு இன்று டில்லியில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்  தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு  காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமை வகித்தார். அப்போது, ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்ட அறிக்கை குறித்த பேச கர்நாடக அரசு முயற்சி செய்தது. ஆனால், அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது விவகாரம் குறித்த நிகழ்ச்சி நிரலை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், இனிவரும் காலங்களில் மேகதாது விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது  என்று தமிழகஅரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள்  தெரிவித்தனர்.

மேலும, ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்குரிய 9.2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு விடுவிக்க ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து கர்நாடக அரசும் தனது நிலையை கூறியது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட காவிர ஆணைய தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான மசூத் உசேன் தமிழகத்து ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.19 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட்டார்.

கடந்த  23ம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தமிழகத்துக்கான நீரை திறந்துவிட வேண்டும் என்றக் கோரிக்கையை கர்நாடகா நிராகரித்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீரை திறந்துவிடும் படி உத்தரவிட்டு உள்ளது.