சென்னை

டுக்குமாடிக் குடியிருப்பு பராமரிப்பு தொகை ரூ. 7500க்கு மேற்பட்டால் அதிகமான தொகைக்கு மட்டுமே ஜி எஸ்டி வசூலிக்க வேண்டும் என சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அனைத்து பெருநகரங்களிலும் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் அதிகரித்து வருகின்றன.  இங்கு குடியிருப்போர் தங்களுக்குள்  ஒரு சங்கம் அமைத்துப் பராமரிப்பு  கட்டணம் வசூலித்துப் பராமரிப்பு செலவுகளைக் கவனித்து வருகின்றனர்.   முன்பு ரூ. 5000 க்கு மேல் கட்டணம் செலுத்தும் போது 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிறகு அந்த தொகை ரூ.7500 ஆக  அதிகரிக்கப்பட்டது.  சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டிவிஎச் லும்பினி ஸ்கொயர் அடுக்குமாடி சங்கத்தினருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.   அந்த குடியிருப்பில் 9 பிளாக்குகளில் 448 குடியிருப்புக்கள் அமைந்துள்ளது.   இங்குப் பராமரிப்புக் கட்டணம் சதுர அடிக்கு ரூ.3.50 வீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த அடிப்படையில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ. 8000 பராமரிப்பு கட்டணமாகச் செலுத்தி வந்தது.  அதனால் சங்கம் இனி ரூ.8000ல் குறைந்த பட்சம் ரூ.7500 போக மீதியான ரூ.500க்கு மட்டும் ஜிஎஸ்டி செலுத்தினால் போதும் என கூறி அதற்கு அனுமதி கோரி இருந்தது.   இந்த கோரிக்கைக்குத் தமிழ்நாடு சட்ட அமைப்பு விளக்கம் அளித்தது.

அந்த விளக்கத்தில் ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.7500 க்கு மேல் செலுத்தும் போது முழுத் தொகைக்கும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.  இதற்குப் பல வரி ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இது தவறானது எனவும் குறைந்த பட்சத் தொகைக்கு மேல் உள்ள தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பதே சரியான முறை என அவர்கள் கூறினர்.

இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியிருப்போர் வழக்கு தொடர்ந்தனர்,  அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், “ஏற்கனவே ரூ.7500 என்பது வரிக்குப்படாத கட்டணம் ஆகும்.  எனவே அதற்கு மீண்டும் வரி விதிப்பது செல்லாது.   ஆகவே ரூ.7500க்கு மேல் பராமரிப்பு கட்டணம் செலுத்துவோர் அந்த தொகைக்கு மேல் உள்ள தொகைக்கு மட்டும் 18% ஜி எஸ் டி செலுத்தினால் போதுமானது” எனத் தீர்ப்பு அளித்துள்ளார்.