சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2, 2ஏ தேர்வு  நடைபெற உள்ள நிலையில், தேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் உள்பட பல்வேறு தகவல்களை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை (மே 21-ம் தேதி) 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2,2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் உள்ள 5,400 காலியிடங்களுக்கு சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து  குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள் நாளை காலை 8.30 மணிக்கே வர வேண்டும் என்றும், 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன்பின்னர் வருபவர்களுக்கு தேர்வறையில் அனுமதியில்லை எனவும் தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை நடைபெறும் குரூப் 2,2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும்  தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்சிகளை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2,2ஏ தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.