சென்னை

மிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை மழை வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே பெய்துள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தின்ன் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளன.

தமிழக நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில்

“கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் தருமபுரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  கடந்த ஆண்டு ஏப்ரலில் தருமபுரியில் நிலத்தடி நீர் கிடைக்கும் சராசரி ஆழம் 5.78 மீட்டர் என்று இருந்த நிலையில், இந்த ஆண்டு 8.98 மீட்டர் அளவுக்கு கீழே சென்றுள்ளது.

நாமக்கலில் 6.15 மீட்டரிலிருந்து 9.34 மீட்டராகவும், கோவையில் 9.4 மீட்டரிலிருந்து 10.85 மீட்டராகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1 முதல் 2 மீட்டர் வரை சரிந்துள்ளன. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர்மட்டம் 0.5 மீட்டர் குறைந்துள்ளது.

ஆனால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 2 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. இதற்கு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கூறப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது