சென்னை:
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், வரும் 31ஆம் தேதி இரவு சென்னையில் பொதுமக்கள் வெளியிடங்களிலும், மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் ஒன்று கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், அரங்குகள், கிளப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் ஒன்று கூடி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டல்கள், தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி என அறிவித்துள்ள காவல்துறையினர், அனைத்து ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகள், பொது இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளனர்.