சென்னை

தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 4 வழி நாலை  அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நாளுக்கு நாள் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் இருந்து மாநகர் பகுதிகளுக்குப் பணி நிமித்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையொட்டி, மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சாலைகளை  அகலப்படுத்துவது, புதிதாக மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

அதில் தாம்பரம்-முடிச்சூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், அந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது  தொடர்கதையாக இருந்து வந்தது.  எனவே முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைபாக்கம் வரை 3.5 கி.மீ நீளத்துக்கு நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டன.

பிறகு  இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 10 கி.மீ நீள சாலைகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்படவுள்ளது.  இந்த திட்டத்துக்காக,முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, தாம்பரம் – முடிச்சூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள 10 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலான இரண்டு வழிச்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுகிறது.  இச்சாலைப் பணிகளின் போது ஒரு பெரிய பாலம் உட்பட 3 பாலங்கள் கட்டப்பட உள்ளது.  சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

டெண்டரை வரும் மார்ச் 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெண்டர் மூலம் தகுதியான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்து அடுத்த மாதம் முதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.