சென்னை,
மிழக முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர் செல்வம் தற்போது சுறுசுறுப்பாக பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளார். அதையடுத்து, அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிரடி அறிவிப்புகளை அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வருகிறார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் வா புயலினால் கடும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. முதல்வர் ஓபிஎஸ்-சும் புயல் பாதித்த பகுதிகளை அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டார்.
புயல்  பாதிப்பால் மக்கள் மின்சாரம் இல்லாமல் ஒருசில நாட்கள் கடும் அவஸ்தை பட்டாலும், அரசின் அதிரடி நடவடிக்கைகளால் ஓரிரு நாட்களில்  பெரும்பான இடங்களில் மின்சாரம் சரிசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால் சென்னை புற நகரில் இன்னும் நிலைமை முழுமையாக சீரடைய வில்லை.
பல பகுதிகளில் விழுந்த மரங்கள் இன்னும் ஒழுங்காக அகற்றப்படவில்லை. குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. மரக்கிளைகள் சாலை ஓரத்தில் இன்னும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கொடுக்க முடியாத  கிராமங்கள் உள்ளன.  இதனால் பொதுமக்கள் பல இடங்களில் மின்சாரம் குடிநீர் கேட்டு மறியல்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தை முதல்வர் கூட்டி ஆலோசித்தார்.
இந்த கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொதுப்பணி நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், சீர் செய்யப்படாத பகுதியில் உடனே பணிகளை தீவிரப்படுத்தவும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.   மேலும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அரசு விழாக்கள் ஏதும் நடைபெறவில்லை. இனிமேல் அரசு விழாக்கள் நடைபெற வேண்டியது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் இரு ஒவ்வொரு துறைக்கும் அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் திறக்க வேண்டிய கட்டிடங்கள், துவக்க வேண்டிய திட்டங்கள் குறித்த விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்.
கட்டிடங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த முழு தகவல்கள் மற்றும் அதன் புகைப்படமும் அனுப்ப வேண்டும்.
காணொலிகாட்சி மூலம் துவக்கப்படும் திட்டமாக இருந்தால் அது பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
புதிதாக கட்டப்பட வேண்டிய பாலங்கள், திட்டங்கள் குறித்த அறிக்கைகளையும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவிகள் பற்றிய விவரங்களையும் விரிவாக அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.