சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, கல்லூரி தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,  , அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும்,  அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும் என்றார்.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டில் 9,494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 15,000 ஆசிரியர் காலி இருந்தாலும் நடப்பாண்டில் 9,494 பேர் புதிதாக தேர்வு செய்யப்படுவர் என கூறியவர்,  கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.