எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி முழு நீள காமெடிப்படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி தரவுள்ளார்.

‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’, மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கிய சாய் ராஜகோபால் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படத்திற்கு ‘ஒத்த ஒட்டு முத்தையா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பல்வேறு படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதிய அனுபவம் உள்ள சாய் ராஜகோபால் முன்னணி இயக்குனர்களிடம் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் முழு நீள நகைச்சுவைப் படமான இதில், யோகி பாபு மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து. சிங்கம் புலி, ரவிமரியா, வையாபரி, முத்துக்காளை, ‘எதிர்நீச்சல்’ ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஸ்ரீ, டிகே ஸ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம களம் இறங்குகிறது..

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர்.

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணியிடம் கூறியதும் மிகவும் மகிழ்ச்சியாக அதை ஏற்றுக்கொண்டு நடிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் இது ஆறு முதல் அறுபது வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்றும் இயக்குனர் சாய் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.