சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும்  நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்ட நிலையலும், தமிழகஅரசு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.  தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 34 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41 லட்சத்து 90 ஆயிரத்து 373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டுள்ளது. 12.9.2021 அன்று முதல் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 34 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 34 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41 லட்சத்து 90 ஆயிரத்து 373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் 4-ந் தேதி (நாளை) 35-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள். இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இதுவரை 42,70,342 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 5,54,588 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வருகின்ற 30-ந் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.

எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.