சென்னை

சென்னை மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த  பிரபல பாடகர் கானா பாலா தாம் இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் பாலா (எ) கானா பாலா.இவர் கானா பாடல்கள் மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியும் நடித்தும் உள்ளார். இவர், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புளியந்தோப்பு பகுதியில் 72வது வார்டில் போட்டியிட்டார். தேர்தலில் எந்த கட்சியிலும் சேராமல் சுயேச்சையாகப் போட்டியிட்ட பாலா திமுக வேட்பாளர் சரவணனிடம் 2208 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இவர் இதே வார்டில் 2006ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு போட்டியிட்டு இரண்டு முறையும் இரண்டாவது இடம் பிடித்தார். இதைப் போல் இந்த முறையும் 6095 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடிக்க முடிந்தது.   கானா பாலா இது குறித்து,, ”இது நான் பிறந்து வளர்ந்த பகுதி. நான் இந்த பகுதி மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்துள்ளேன். ஆகவே இந்த பகுதியில் நின்று வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராகச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். .

ஆயினும் மூன்று முறையும் இரண்டாவது இடமே எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.   நான் நான் சோர்ந்து போகவில்லை. தொடர்ந்து பாடல்கள் பாடுவதிலும் எனது தொழிலிலும் ஈடுபடுவேன். எனக்கு இனி தேர்தலில் நிற்கும் எண்ணம் கிடையாது.   மாறாக இளைஞர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளட்டும்.

நான் அரசியல் கட்சிகளில் சேர்ந்து சீட் வாங்கி இருந்தால் வெற்றி பெறலாம் என பலரும் தெரிவித்தனர்.  அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இனி தேர்தலில் நிற்கும் எண்ணம் இல்லை. எனது கிட்டார் சின்னத்தை 7 நாட்களுக்குள்  இப்பகுதி மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்த்துள்ளேன. எனக்கு அதன் விளைவாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.  எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.