சென்னை: ஜி20 உச்சி மாநாட்டையொட்டி,  இன்று இரவு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகி நடைபெற்று வருகிறது.  இந்த மாநாடு,  டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில்  2 நாள் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டுக்கு வந்த தலைவர்களை மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டையொட்டி,   இன்று இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் உலக நாட்டின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த விருந்தில் கலந்து கொள்ள  முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு  அனுப்பப்பட்டது. அதை ஏற்று ஸ்டாலின் இன்று  டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலுவும் உடன் செல்கிறார். டெல்லியில் முதல்வரை, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் எம்.பி.க்கள் வரவேற்கின்றனர்.

அதேசமயம் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை  எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் இன்று இரவு அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்,  விருதை முடித்துவிட்டு, நாளை காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.

ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது – ‘பாரத்’ மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி… வீடியோக்கள்