சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்து உள்ளது. அதன்படி, பிப்ரவரி  19 ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை  தொடங்கி  தொடங்குகிறது. பிப்ரவரி  22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு,  பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 28-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. வேட்புமனுக்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். பிப்.4-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை பிப்.5-ம் தேதி நடக்கும். மனுக்களை திரும்பப் பெற பிப்.7 கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு பிப்ரவரி  19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் 2-ம் தேதி நடக்கும். மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலுக்கான கூட்டம் மார்ச் 4-ம் தேதி நடக்க உள்ளது. அன்று மொத்தம் 1,298 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் வார்டுகள் முழு விவரம்: