சென்னை

மிழக அரசு தேர்வுத்துறை இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். நேற்று காலை 9.30 மணிக்கு இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

அதன்படி 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்தமுறையும் மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.37 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நேற்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று முதல் 11ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை தெரிவித்துள்ளது .

மறுகூட்டல் மற்றும் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 07.05.2024 காலை 11.00 மணி முதல் 11.05.2024  மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை 09.05.2024 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த தேதி, பதிவண் ஆகியவற்றைப் பதிவுசெய்து, www.dge.tn.nic.in இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.