சென்னை

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து வரும் புதன்கிழமை முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு ஆலய விழாவைப் புறக்கணிக்க போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களைச் சேதப்படுத்தினர். 15 மீனவர்களை கைது செய்து, அவர்களது 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்தனர். இதேபோல்‌ ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்‌களையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இந்த கைது நடவடிக்கை மூலம், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. 136‌ படகுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து அவசர ஆலோசனை நடத்திய ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள், வரும் புதன்கிழமை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். அடுத்த வாரம் நடைபெறவுள்ள கச்சத்தீவு ஆலய விழாவையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள மீனவர்கள், பாம்ப‌னில் ரயில் மறியலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.