ராகுல் நல்ல மனிதர்தானே! அவரோடு நட்பாய் இருந்தால் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ். இது கூட்டணிக்கான சிக்னலா? என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ராகுல்காந்தி  ‘கிசான் யாத்திரை’ என்ற பெயரில் 2,500 கிலோமீட்டர் பிரச்சாரப் பயணத்தை துவங்கியுள்ளார்.
இதுகுறித்து,  உத்திரப்பிரதேச முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் முன்னனித் தலைவர்களுள் ஒருவரும், முலாயம் சிங்கின் மகனுமான  அகிலேஷ் யாதவிடம் கேட்டபோது,
“ராகுல் நல்ல மனிதர்தானே! அவர் உத்திரப்பிரதேசத்தில் அதிகநாட்கள் செலவிடுவது நல்லதுதான். நானும் அவரும் நட்பாய் இருந்தால் அதில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பினார்.
அகிலேஷின் இந்த பேச்சு,  கூட்டணிக்கான சிக்னல் என்று எடுத்துக்கொள்ளலாமா என்று நிருபர்கள் கேட்டதற்கு , அகிலேஷ் யாதவ் “ஏன் எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கிறீர்கள்” என்று மட்டும் சொல்லி நழுவிக்கொண்டார்.
அகிலேஷின் விமர்சனத்துக்கு ஏற்றார்போலவே,  உத்திரப்பிரதேசத்தை சூறாவளியாக சுற்றிவரும் ராகுல் காந்தி ஒருபக்கம் மத்திய அரசை கடுமையாக விளாசி வருகிறார், ஆனால்  மாநில அரசை விமர்ச்சிக்கும்போதோ சற்று மிதமான போக்கை கடைப்பிடிக்கிறார்.  இது அரசியல் விமர்சகர்களிடையே கூட்டணி மாற்றத்துக்கான முயற்சியாக இருக்கலாம் என விவாதிக்கப்படுகிறது.