கொல்கத்தா: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ இன்று திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) இணைந்தார். இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பாபுல் சுப்ரியோ நாடாளுமன்ற தேர்தலில் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மாற்றியமைக்கபட்ட போது பாபுல் சுப்ரியோவிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இன்று திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்த நிலையில், அதை வாபஸ் பெற்றுக்கொண்டவர், இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டீரக் ஓபிரைன் முன்னிலையில் திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.