சென்னை:
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 ஆசிரியர்கள் மீது 2 மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் பிரம்மா ஸ்ரீ பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பயின்ற மாணவிகள் இருவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் பாலியல் புகார் ஒன்றை அளித்தனர்.

அந்த புகாரில் தாங்கள் பயின்ற காலத்தில் அப்பள்ளியில் ஆசிரியர்களாக இருந்து வந்த சிவக்குமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் ஆகியோர் வகுப்பறையில் பல முறை தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த பள்ளி மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தினர். முகாந்திரம் இருப்பதால் குற்றம்சாட்டப்பட்ட 3 ஆசிரியர்களுக்கும் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, புகார் தொடர்பான ஆதாரங்களை திரட்டவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.