சென்னை: விஜய் வெளிநாட்டு கார் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் நடிகர் விஜயை விமர்சித்தது குறித்து முன்னாள் நீதிபதி சந்துரு கடுமையாக சாடியுள்ளார்.  ”விஜய் ரீல் ஹீரோவா, ரியல் ஹீரோவா என்பது நீதிபதிக்கு தேவையில்லாதது” என விமர்சித்து உள்ளார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடைக் கோரி தொர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம்,  ”நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது” என்று கூறியதுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

நீதிபதியின் இந்தக் கருத்துக்கு, ஒரு தரப்பினர் ஆதரவும்  சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.  காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்,  ”இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. அவர்களை நடிகர் என்று பார்ப்பது தவறு” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நீதிபதியின் கருத்தை முன்னாள் நீதிபதி சந்துரு கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் 304 வது பிரிவு ‘இந்தியா முழுக்க யார், எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். அதற்கு, எந்தத்தடையும் இருக்கக்கூடாது’ என்கிறது. ஆனால், இந்தமாதிரி வாகனங்களுக்கு நுழைவு வரி போடும்போது, அந்த சட்டம் செல்லுமா? செல்லாதா? என்ற பிரச்சனை எழுந்தது.

4 சதவீத வரிக்கும் 13 சதவீத வரிக்கும் உள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 9 சதவீதம் வருகிறது. அதனால்,அதில் தவறில்லை. வரியை ஏய்க்க வாகனங்களை வாங்கி வருபவர்களிடம் வரி வாங்கலாம் என்றார்கள். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்,  நான் சுங்கவரி கட்டியதால் என்னால் நுழைவு வரி செலுத்தமுடியாது’ என்று கேட்கிறார். அது அவரது உரிமை.

விஜய் வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்துள்ளார். அவர் யாரையும் ஏமாற்றவில்லையே? அவருக்கு வாதிட உரிமை இருக்கிறது. அவரின், வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தள்ளுபடி செய்யலாம். ஆனால், இந்தமாதிரி ஸ்டேட்மெண்ட் எல்லாம் அநாவசியம். இது விஜய்க்காக சொல்லவில்லை.

பணம் மிச்சப்படுகிறது என்று வழக்கறிஞர் ’கேஸ் போடலாமா?’ என்று கேட்டால் ’போடுங்கள்’ என்றுதான் சொல்வார்கள். போடவேண்டாம் என்றா சொல்லப்போகிறார்கள்? அதனால், வரி ஏய்ப்பு செய்வதற்கும் வரியை திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. திட்டமிடுவதைத்தான் பலரும் செய்கிறார்கள்.

விஜய் தரப்பும் இதுபோல் வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுக்கிறது. அதுவும், இந்த வழக்கு இப்போதுதான் வந்துள்ளது.

“நான் நீதிபதியாக இருந்திருந்தால் இந்தமாதிரி தீர்ப்பை கொடுத்திருக்கமாட்டேன். எவ்ளோ பெரிய ஆட்களாக இருந்தாலும் பிரச்சனை சார்ந்த வல்லுநர்களிடம்தான் செல்வார்கள். அதுமாதிரி, வரியில் இருந்து விதிவிலக்கு கேட்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமை.

இந்தியாவில் பெரிய பெரிய பணக்காரர்கள் பலர் வரிவிலக்கு கேட்டிருக்கிறார்கள். கேட்டுக் கிடைத்தால் சந்தோஷப்படப்போகிறார்கள். இல்லையென்றால் கட்டப்போகிறார்கள்.

ஆனால், விஜய் விவகாரத்தில்,  ரீல் ஹீரோவா இல்லை ரியல் ஹீரோவா என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம்.  அதற்கு விஜய்யை ஏன் குறை சொல்லவேண்டும். அவர், வரி ஏய்ப்பு செய்பவர் என்று எப்படி சொல்ல முடியும்? விதிவிலக்கு இல்லை என்று சொன்னால் கட்டப்போகிறார். இதனால், அரசிற்கு எந்த நஷ்டமும் வரவில்லையே?”. ”இதில், எங்கு சமூக நீதி வந்தது? வரி சட்டங்களைப் பொறுத்தவரை நீதிபதிகள் கண்டிப்பாக இருப்பது சரியானதுதான். ஆனால், அது வரி வசூலுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும். அதற்கு, ஏன் விஜய்யயை விமர்சிக்கவேண்டும்?

விஜய் சினிமாவில் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், ஒரு டிகிரி படித்தவர். ஒரு டிகிரி படித்த ஸ்டூடண்டுக்கு இந்த உலகத்தைப் பற்றி என்னத் தெரியும்? மெனேஜர் எழுதிக்கொடுக்கும் ஸ்டேட்மெண்டுக்கு அவர் கையெழுத்துப் போடப்போகிறார். எல்லாருக்கும் எல்லா வரிச்சட்டமும் தெரியவேண்டும் என்று அவசியம் கிடையாது. இதனை விஜய் தரப்பில் இரண்டு நீதிபதிகளிடம் அப்பீல் போட்டால் இந்தக் கருத்தை எல்லாம் ரத்து செய்துவிடுவார்கள். ஒருவரின் கேரக்டரையே டேமேஜ் செய்தால் அப்பீல் போடலாம்”.

இவ்வாறு அவர் கூறினார்.