சண்டிகர்: பறக்கும் மனிதர் என புகழப்படும், முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் (வயது 91) தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

மின்காசிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருக்கும் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், திடீரென அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மிக்காசிங் நேற்று இரவு 11.30 மணியளவில்  காலமானார் என அறிவிக்கப்பட்டது.

மில்கா சிங் இந்தியா சார்பில் 1956, 1960, 1964 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்.  1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மயிரிழையில் ஒலிம்பிக் பதக்கத்தை நழுவவிட்டு, 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் 4 ஆவது இடம் பிடித்தார். இதனால் “இந்தியாவின் பறக்கும் மனிதர்” என புகழப்பட்டார்.  இந்திய தடகள ஜாம்பவானாகத் திகழ்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் (Milkha Singh), மிக வேகமாக ஓடும் திறமையினால், பறக்கும் இந்தியர் என அழைக்கப்படுகிறார். ஆசிய தடகள போட்டிகளில்மில்கா சிங் 5 முறை தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மில்கா சிங்குக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இந்திய மகளிர் வாலிபால் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மில்காசிங் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.