சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம்அல் புகாரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.

திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து, 5 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகார போதையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மாநில காங்கிரஸ் கமிட்டியின் நடவடிக்கைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.5.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி தி.மு.கவில் இணைந்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக உடன் கூட்டணி அமைத்தது. இதை அலீம் அல் புகாரி கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவரை இடைநீக்கம் செய்து அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அலீம் அல் புகாரி, தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
[youtube-feed feed=1]