அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக குறைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு இன்று மேலும் 1.5% குறைந்து 78.34 டாலராகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) எண்ணெய் 1.8% சரிந்து 75.43 டாலராகவும் வர்த்தகமானது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இரு வகை எண்ணெய் விலைகளும் 15%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து, போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை நெருங்கியுள்ளன.

பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் அணு திட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் வெடித்தது. அதற்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலைகள் உயர்ந்தன.
தற்போது அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஈரான் மீதான எண்ணெய் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், தனது எண்ணெயை சுதந்திரமாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற சைகையால் சில பங்குச் சந்தைகளில் கலவையான நிலை காணப்பட்டது. இருப்பினும், எண்ணெய் விலை சரிவு மற்றும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உலக சந்தைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பெட்ரோல் விலையும் குறையத் தொடங்கியுள்ள நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு எரிபொருள் விலையை குறைவாக வைத்திருக்கவே அதிபர் டிரம்ப் விரும்புவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]