சென்னை:  சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 8 மாதமாக சிறையில் உள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி  2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால்  கைதான நிலையில், அவர் தொடர்ந்து  8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

முன்னதாக  செந்தில்பாலாஜி தரப்பில்  பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் , அதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன .  உச்ச நீதிமன்றத்தில் கூட அவருக்கு ஜாமீன்  தர மறுத்து விட்டது. இதைத்தொடர்ந்து,  சமீபத்தில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, மீண்டும்  செந்தில் பாலாஜி  தரப்பில் ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி, அவரது வழக்கை சென்னை அமர்வு நீதிமன்றம் 3 மாதங்களுக்கு முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.