சென்னை

னமழையால் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 22 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மழைகளின் அளவைப் பொறுத்து நிறங்களின் அடிப்படையில் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவிக்கிறது.  அதன்படி ரெட் அலர்ட் என்னும் சிவப்பு எச்சரிக்கை பேரபாயம் அளிக்கும் மழை மற்றும் வெள்ளத்துக்கு அளிக்கப்படுகிறது.  அடுத்ததாக  மிகக் கன மழைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்படுகிறது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில்,

இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், பல மாவட்டங்களில் மிக கன மழைக்கும்; மேலும் பல மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாகப் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை இடி மின்னலுடன் கன மழை பெய்யலாம்.

வரும் 21 மற்றும் 22 தேதிகளில் கீழ்க் காணும் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

வரும் 21ம் தேதி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிகக் கன மழை பெய்யும். தவிர சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும்.

அடுத்து 22ம் தேதி சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது”.

என தெரிவித்துள்ளார்.