திருப்பூர்

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய என் மண் என் மக்கள் நடைப் பயண நிறைவு விழா பல்லடம் அருகே நடைபெறுகிறது.  இந்த பாதயாத்திரை நிறைவு விழாவைப் பாராளுமன்றத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டமாக நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக சுமார் 1300 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தில் உள்ளது.  பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பொதுக் கூட்ட மைதானத்தை  மத்திய சிறப்பு பாதுகாப்புப் படையினர் அவர்களது தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர்.

அவர்களது அறிவுறுத்தல் படி, இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களும், திருப்பூர் மாவட்ட எல்லையில் ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

எனவே காவல்துறையினர்  ட்ரோன்களை கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . பொதுக்கூட்ட பாதுகாப்புப் பணிகளில் கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 7ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.