சென்னை: அத்தியாவசிய உணவு பொருட்களின் மீது விதிக்கப்பட்ட GST வரி உயர்வினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்தியஅரசை வலியுறுத்தி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜி.எஸ்.டி கூட்டத்தில் வாயில்லா பூச்சியாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் இருந்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கூறியதோடு, வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காததற்காக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை இ.பி.எஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ், வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கூறியதோடு, வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காததற்காக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை சாடியுள்ளார்.  ஜி.எஸ்.டி-யின் 47 ஆவது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தி.மு.க அரசின் நிதி அமைச்சரும் கலந்துக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்கள் வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏழை, நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை, அரிசி மாவு, கோதுமை மாவு, பருப்பு, பன்னீர், தேன், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள், நாட்டுச்சர்க்கரை, பொரி, இறைச்சி உட்பட பல பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலக சேவைகளுக்கும் 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பொருட்களின் விலையை உயரும் என்பதால், வரி விதிப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வரி விதிப்பினால், உணவகங்களில் உணவு விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியின்போது, ஜி.எஸ்.டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக் கொண்டபோது தமிழகத்தின் சார்பில் வாதாடி பல அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி விலக்கு பெறப்பட்டது. ஒரு சில பொருட்களுக்கு வரி குறைப்பும் பெறப்பட்டது. வெட்கிரைண்டர்களுக்கு 18%லிருந்து 5% ஆக வரி குறைப்பு பெறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துக்கொண்ட நிதி அமைச்சர் மக்களை பாதிக்கக் கூடிய வரி உயர்வுகளுக்கு ஆட்சேபனையோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் வாயில்லாப் பூச்சியாக இருந்தது ஏன்? ஆனால், திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் எந்த குறையும் இல்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என சிறுமைப் படுத்தி தாங்கள் தான் வலிமையானவர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்களின் கையாலாகத்தனம் இதன் மூலம் வெளிப்படுகிறது.

வரி விதிப்புக்கு தமிழக நிதி அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காமல், மௌனம் காத்தது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் ஏழை மக்கள் மீது தி.மு.க அரசு கொண்டுள்ள அக்கறை வெளிப்பட்டுள்ளது.

ஏழை மக்களை பாதிக்கும் இந்த வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சிலையும், மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன். வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசை கண்டிப்பதோடு, வரி விதிப்பை திரும்ப பெற ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு தி.மு.க அரசின் சார்பில் அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.