இந்திய பிரீமியர் லீக் டி-20 போட்டி போல் 2023 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவிலும் டி-20 லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் ஆறு அணிகளை இந்தியாவை சேர்ந்த ஆறு ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

ஜோஹன்னஸ்பர்க் நகரைச் சேர்ந்த வாண்டரர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் வாங்கி இருப்பதாக சி.எஸ்.கே. அணியின் உரிமையாளர் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

“கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்தோம். தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இந்த டி20 லீக் போட்டி மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம்.”

மேலும், “கிரிக்கெட் விளையாட்டுக்கு எங்கள் பங்களிப்பாகவும் இது இருக்கும். அதேவேளையில் புதிய திறமைகளை கண்டறியவும் இது உதவும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற டி-20 லீக் அணிகளை வாங்கியுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் உரிமையாளர்கள் விவரம் :

மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – ‘நியூலேண்ட்ஸ்’ அணி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர்கள் ஆர்பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் – ‘கிங்ஸ்மீட்’ அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர்கள் சன் டிவி நெட்வொர்க் – ‘செயின்ட் ஜார்ஜ் பார்க்’ அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர்கள் ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குரூப் – ‘போலண்ட் பார்க்’ அணி

டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர்கள் JSW ஸ்போர்ட்ஸ் – ‘சூப்பர்ஸ்போர்ட் பார்க்’ அணி