சென்னை: கடுமையான மழை காரணமாக, கேரள  மாநிலம் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இதையொட்டி, கேரளாவுக்கு  திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கேரளாவில் மழை கொட்டி வருகிறது. இதனால்,  தெற்கே திருவனந்தபுரம் தொடங்கி வடக்கே காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்த நிலையில், கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களை  மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக சார்பில், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கி றார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை திமுக அறக்கட்டளையின் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (18.10.2021) வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.