ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் 6 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் 500 விசைப்படகுகளில் நேற்று வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தனர். சில விசைப்படகுகள் இந்திய-இலங்கை எல்லைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றன.
அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட சிறிய பிளாஸ்டிக் ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து சுற்றி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளேயே மீன்பிடி பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்கக்கூடாது என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டனர்.
அப்போது நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்றது. மேலும் அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனால் சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் 6 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.