சென்னை: கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் மரணித்ததாக கூறப்படும் ராஜாவின் மறைவுக்கு இரங்கலையும், 5 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தம்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் கடந்த செவ்வாய் அன்று இரவு மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளபாலாற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கிருந்து ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பித்து தமிழக எல்லைக்குள் வந்துவிட்டனர். ஆனால், மீனவர் ராஜா காணாமல் போயிருந்தார்.

மீனவர் ராஜா உயிரிழப்பு : பின்னர், நேற்று அவர் ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவிரி ஆற்றங்கரை பகுதியில் உடல் உப்பிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சியினரும் கர்நாடக வனத்துறையின் துப்பாக்கி சூடுக்கு காரணமாகத்தான் மீனவர் ராஜா உயிரிழந்தார் என்றும் அதற்கு தங்கள் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர்.

முதல்வர் கண்டனம் : இந்நிலையில் இது குறித்து நேற்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி சம்பவத்தில் ராஜா என்ற காரமடையான் என்பவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ராஜாவின் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் இந்த துப்பாக்கி சூட்டுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் நிதியுதவி : இதில், ராஜாவின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ஐந்து ரூபாய் நிதி உதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில் பாமக உள்பட தமிழக அரசியல் கட்சிகள், கர்நாடக வனத்துறையினரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளன.