சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி உள்பட 7 கோயில்களில் , பக்தர்களின் தேவைக்காக முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதுகறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர்-அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,  திருவண்ணாமலை-அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், மேல்மலையனூர்-அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (மேம்படுத்தப்பட்ட) ஆகிய 7 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 திருக்கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அத்திருக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால்  உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ முதலுதவி மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22ஆம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுகளுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருக்கோயில் முதலுதவி மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு திருக்கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, திருச்செந்தூர்-அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,  திருவண்ணாமலை-அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், மேல்மலையனூர்-அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி- அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் (மேம்படுத்தப்பட்ட) ஆகிய 7 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மருத்துவ மையங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.

இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி செய்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும். இப்பணிக்காக ஓர் மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 இலட்சம், வீதம் 10 திருக்கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி திருக்கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.