ஜார்ஜ்

சென்னை:

சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை அணைக்க போராடிய தீயணைப்பூ வீரர்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு வீரர் உயிரழந்துவிட்டார். ஆனால் இதுவரை தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ஜார்ஜ், சம்பவ இடத்தை பார்வையிடவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயம்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் கூறவும் வரவில்லை.

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள பேக்கரியில் நேற்று நள்ளிரவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். அப்போது கடையின் உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் நாலாபுறமும் தீ பரவியது. இதில் தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டது.

விபத்து

விபத்து குறித்து தகவல் வந்ததும் கொடூங்கையூர் காவல் நிலைய காவலர்களும் சம்ப இடத்துக்கு வந்து தீயை அணைக்க உதவினர். சிலிண்டர் வெடித்ததில் கொடுங்கையூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் காவலர் ஜெயபிரகாஷ், அந்தோணி, புருஷோத்தமன் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். பொதுமக்களுடன் சேர்த்து 45 பேர் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் ஏகராஜன் என்ற தீயணைப்பு வீரர் இன்று காலை உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்னை காவல்துறை ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.சுதாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணனும் சென்று ஆறுதல் கூறினார். தவிர இன்று காலை 11.30மணி அளவில் நேரில் மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வர இருக்கிறார்.

ஆனால் இதுவரை தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ஜார்ஜ், சம்பவ இடத்துக்கோ, மருத்துவமனைக்கோ வரவில்லை. “இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது சம்பவ இடத்துக்கு உயரதிகாரிகள் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்துவது வழக்கம். தவிர தனது துறையைச் சேர்ந்த வீரர் உயிரிழந்தும்கூட மருத்துவமனைக்கும் ஜார்ஜ் வரவில்லை என்பது வருத்தமான விசயம்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதே நேரம், தீ அணைப்புத்துறை டிபுடி டைரக்டர் மீனாட்சி விஜயகுமார் ஸ்பாட்டிலேயே இருந்தார்.