டெல்லி:

ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து திருமணங்களை நடத்தினால்  அதில் 10 சதவிதத்தை அரசின் நலத்திட்டத்துக்கு வழங்கவேண்டும் என

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சத் ரஞ்சன்  கூறினார்.

மக்களவையில்  இதுதொடர்பாக பேசிய அவர்,  திருமணங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை, மற்றும்  ஆடம்பர விருந்துகளுக்கு  கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட  சூழலில்  திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்துவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் ரூ 5 லட்சத்துக்கும் மேல் அதிகமாக செலவு செய்து திருமணங்களை நடத்தவிரும்பினால், அவர்கள் அந்தத் தொகையில் 10% -த்தை அரசின் நலத்திட்டத்துக்கு வழங்கவேண்டும் என மசோதா கொண்டு வரவேண்டும் என கூறினார்.

ஆடம்பர திருமணங்களை பார்க்கும் எளிய மக்கள் இதுபோன்றுதான் திருமணம் நடத்தவேண்டும்  என்று உந்தப்படுகிறார்கள் என்றும்  இது சமூகத்துக்கு பெரும் கேடானவை என்றும் கூறிய அவர்,  திருமணங்களில் ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கத்துக்கு  முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என வலியுறுத்தினார். விலையுயர்ந்த திருமண அழைப்பிதழ்கள்  தேவையற்றவை என்றும் டிஜிட்டல் காலத்தில் வாழும் நாம் அழைப்பிதழை டிஜிட்டலில் அனுப்பலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ரஞ்சித் ரஞ்சன் கோரிக்கை விடுத்தார்.