ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை திருமதி ரோஜா செல்வமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி திருமதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.

இதனை அறிவிக்கும் விதமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவர் கல்யாண் இசையமைப்பாளர் சங்கம் சார்பில் தீனா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் காட்ரகட்டா பிரசாத், இயக்குநர் ஆர் வி உதயகுமார உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, “செல்வமணி எனது திரைத்துறை நண்பன் அல்ல, குடும்ப நண்பன். ரோஜாவுக்கு நான் தான் பெயர் வைத்தேன். நான் எதை தொட்டு பெயர் வைத்தாலும் விளங்குதே என, நான் என் அப்பா அம்மாவை நினைத்து பெருமை கொள்வேன்.

ரோஜா, தனக்கு சரியென்று நினைத்ததை மிக தைரியமாக சொல்லக்கூடிய பெண்.

செல்வமணியை மேடையில் நான் தான் பேச வைத்தேன், இப்போது மிக அற்புதமாக பேசுகிறார். அவர் அரசியலுக்கு வந்தால் பெரிய ஆளாக வருவார். தன் மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றி பெற வைத்துள்ளார் செல்வமணி. ரோஜா ஒரு மந்திரியாக பதவி ஏற்றிருப்பது பெருமையாக – மகிழ்ச்சியாக உள்ளது.

தென்னிந்திய திரைத்துறையை சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளும் பிரமாண்ட விழாவாக இது இருக்கும். ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும். இந்த விழாவிற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசும்போது, “என் மனைவிக்கு பாராட்டு விழா என்றால் நான் இருக்கும் பதவியை தப்பாக பயன்படுத்துவது போல் இருக்கும், வேண்டாம் என ஆர் வி உதயகுமார் அண்ணனிடம் சொன்னேன். இதனை பாரதிராஜா சாரிடம் சொல்ல ஒரு வாரம் தயங்கினேன். அவர் நான் பெயர் வைத்த பெண் நானே தலைமை தாங்கி இவ்விழாவை நடத்தி தருகிறேன் என்றார், அவருக்கு நன்றி. அதிகாரமுள்ள அரசியலில் ஒரு பெண் சாதிப்பது என்பது எத்தனை கடினம் என எனக்கு தெரியும்.

முதலில் அவர் கொஞ்ச நாள் இருப்பார் பின் வந்துவிடுவார் என்று நினைத்தேன். பின்னால் அவர் மேடையில் பேசுவதை பார்த்து மிரண்டு விட்டேன். அவரிடம் பின் உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள் நான் துணை நிற்கிறேன் என்றேன். அவர் முதல் முறை ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த போது நான் தோற்று அரசியலிலிருந்து வர மாட்டேன் என்றார். மீண்டும் ஒரு தேர்தலில் தோல்வி. அவர் பிரபலமாக, பிரபலமாக சொந்த கட்சியிலும் எதிர்கட்சியிலும் பெரிய எதிர்ப்பு. மூன்றாவது தேர்தலில் வெற்றி பெற்றார்

ஒரு யுத்தத்தில் வென்றதாக பேசினார். அது தான் அவரது குணம், அவரது போராடும் குணம் தான் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. ஒரு பெண் கலைத்துறையில் இருந்து அரசியலில் வெற்றிபெற்றதற்கே இந்த விழா என எடுத்துக்கொள்ள வேண்டும். அனைவரும் இதில் ஒன்றுபட்டு பாராட்டுவிழா நடத்த ஒன்றிணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.