டெல்லி: 2023 பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.50 லட்சம் கோடி என மத்திய நிதியமைச்சகம்  தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.. அதன்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.  கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.55 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் ரூ. 1.50 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன.

கடந்த நிதியாண்டு (2021-22) பிப்ரவரி மாதம் ரூ. 1,33,026 கோடி வசூல் ஆகியுள்ளது. நடப்பு ஆண்டு இதைவிட கூடுதலாக 12% வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.