சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில்,  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் எடப்பாடியின் கையே ஓங்கி உள்ளது.  ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிதரப்பில் கே.எஸ்.தென்னரசும்,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  பொதுக்குழு மூலமாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது அதன்படி,  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசை ஆதரித்து 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கிடையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கிடையில் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்  விசாரண முடிவடைந்து தீர்ப்புக்காக காத்திருக்கிறது.

இந்த பரபரப்பான சூழலில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்க அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.