டெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம்  (பாரத் பந்த்) நடைபெறும் என விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான மத்தியஅரசு கடந்த ஆண்டு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.  இதற்கிடையில், விவசாயிகளுடன் மத்தியஅரசு மற்றும் உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்களது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில்  40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் கிசான் மகா பஞ்சாயத்து எனும் விவசாயிகள் மாநாடு உ.பி. முசாபர் நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய  பாரதீய கிசான் சங்கம் தலைவர் ராகேஷ் திகாயத் சிறப்புரை ஆற்றினார். அப்போது, மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்ததுடன்,  நமது நாடு ஆட்சியாளர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  நாடு விற்பனை செய்யப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இந்த மாநாட்டின் நோக்கமே,  நமது விவசாயமும், நாடும் காக்கப்பட வேண்டும் என்பது தான் என்று கூறியதுடன், இது போன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவித்தார்.

மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியதுடன், மேலும் இந்த கோரிக்கையைநமது கோரிக்கையை மேலும் வலியுறுத்தும் வகையில்,  வருகிற 27-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

ஏற்கனவே, விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பை சேர்ந்த ஆஷிஷ் மிட்டல்   செப்டம்பர் 25-ந்தேதி பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்த நிலையில், தற்போது, பாரதீய கிசான் சங்கம் தலைவர் ராகேஷ் திகாயத் வரும் 27ந்தேதி பாரத் பந்த் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 25-ந்தேதி பாரத் பந்த்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு…