சென்னை

சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமான 28 வயதாகும் சித்ரா தற்போது தொடர்களிலும் நடித்து வருகிறார்.   விஜய் டிவியில் இவர் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொடர் பலராலும் விரும்பி பார்க்கப்படும் தொடர் ஆகும்.  இதன் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

தினமும் வீட்டில் இருந்து நசரத்பேட்டை சென்று வர சிரமம் ஏற்பட்டதால் சித்ரா நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்.  இவருக்குச் சமீபத்தில் ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.   அந்த ஓட்டல் அறையில் இவருடன் ஹேம்நாத் தங்கி உள்ளார்.

இன்று காலை ஹேம்நாத் வெளியே சென்றிருந்த போது சித்ரா தனது ஓட்டல் அறையை மூடிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.   வெகுநேரமாக இவருடைய அறை திறக்கப்படாததால் ஓட்டல் ஊழியர்கள் சந்தேகத்தில் அறைக்கதவை உடைத்துத் திறந்த போது இவர் சடலம் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  சித்ராவின் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.